Sunday, October 2, 2016

எங்கேயும் எப்போதும்

தருமராசா அஜந்தகுமார்


அ) பெண் போராளி ஒருவரின் கையில் இருக்கும் துப்பாக்கி போல அவர் அதை நீட்டிக்கொண்டிருந்தார்.
பஸ் கண்டியை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. மலையின் எழிலும் அது தரும் பயமும் சேர்ந்து 'ஏறிக்' கொண்டிருக்கும் போதுதான் இது நடந்தது.
என்னைப் பார்த்துச் சொன்னார், இண்டைக்கு இவனுக்கு இதாலே குத்தாமல் விட மாட்டன். என்னிலும் வாடலான ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒராள் அதே ஐம்பதில் நிற்கும் அம்மணிக்கு பின்னாலே நின்றார். தன்னைப் பற்றித்தான் அந்த மனிசி கதைக்குது எண்டு தெரிந்தோ தெரியாமலோ அந்த மனுசன் பஸ் ஏறும் குலுக்கலுக்கு நடுங்கிப் பின்னாலே முன்னாலே வருவதும் போவதுமாய் நின்றார்.
மனிசி எனக்குக் காட்டின நேராக்கின ஊசியை அவர் வரும் வழிக்காகக் காத்திருக்க வைத்தார். அது ஏறிவிட்டது. எங்கே ஏறியது என்பதை என்னால் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் கண்ணில குத்தின மாதிரி அந்த மனுசன்ர கண் முழிசி ஏன் குத்தினது என்ற கேள்விக்குறியோடு தவிச்சது எண்டதை மட்டும் கவனிச்சன்.
ஆளுக்குச் சொன்னன் 'ஐயா கொஞ்சம் தள்ளி நில்லுங்க' எண்டு. அது ஆருக்கான பாதுகாப்பு என்பதையும் எனக்குச் சரியாகச் சொல்லத் தெரியேல்ல.
மனிசின்ர முகத்தைக் கவனிச்சன். பரம திருப்தி. ஊசியைக் காணல்ல. 'இவங்களுக்கு இதுதான் செய்யோணும் எண்டா'.
நான் மிக்க 'மரியாதையோடு' புன்னகைத்தேன்.
பஸ் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆ) 'தம்பி பின்சீற்றிருக்குப் போய் இருங்கோ'
பின்சீற்றை நோக்கி 'முன்'னேறினேன்.
இரண்டு பேர் இருந்தார்கள். இரண்டு பேரும் கரை ஜன்னலில் இருந்தார்கள். தொங்கலில் ஓர் ஆச்சி. அடுத்த தொங்கலில் ஒரு பெடியன். பெடியன்ரை முகம் ஒரு 'சுழிப்பில்' இருந்தது.
நடுவில் இருந்தன். அப்பதான் எனக்கு விளங்கிச்சு. அம்மாட்ட இருந்து 'மீன்வாசம்' தவழ்ந்து வந்தது.
சுருங்கிய கன்னம், இடுங்கிய கண்கள், நெரிஞ்சுபோன உடல்.
'எங்கே போட்டு வாறியள் அம்மா'
'உதயனுக்குப் போட்டு வாறன்' கையில இரண்டு மூன்று உதயன் பேப்பர் இருந்தது.
என்ரை மூண்டு பெடியங்கள்ள இரண்டு பேரை கடலுக்கை தொழிலுக்குப் போகேக்க சுட்டுப் போட்டாங்கள் ராசா. கண்கள் நனைந்திருந்தன.
என்ரை கடைசி வெளிநாட்டுக்கு ஒரு மாதிரிப் போட்டான். அவனுக்கு அங்க காட் கிடைக்கிறதுக்கு தமையன்மாரைப் பற்றி வந்த செய்தியைக் காட்டுறது நல்லதாம். பாவம் பெடி அங்கை நிண்டு கஸ்டப்படுகுது. அவவின்ரை நாத் தளுதளுத்தது.
பேப்பரை எனக்குக் காட்டினா. எனக்கு அந்தரமா இருந்தது. இப்ப மீன் மணக்கேல்ல.
பஸ் ஓடிக் கொண்டிருந்தது.
இ)
மட்டக்களப்பில் இருந்து இரவு 9.30 இற்கு பஸ் வெளிக்கிட்டது.
நாங்கள் மூன்று நண்பர்களும் சொகுசாக அமர்ந்து கொண்டோம்.
நான் பஸ்ஸில் ஏறியதும் கையில இருந்த புத்தகத்தையும் பிறகு முகப் புத்தகத்தையும் பார்த்தேன்.
கொஞ்ச நேரத்தாலே நித்திரையாப் போனன்.
பக்கத்திலிருந்த நண்பர் தட்டி எழுப்பினார். பஸ்ஸின்ரை ஓட்டத்தைப் பார்றா எண்டு. எங்கேயோ தலைதெறிக்க ஓடுற மாதிரிக் கிடந்தது. திடீரென்று எழும்பினதாலோ என்னவோ பயமாக் கிடந்திச்சு.
நேரத்தைப் பார்த்தேன் 11.30.
அதிக திருப்பங்களைக் கொண்டிருந்தது அந்தப் பாதை என்று விளங்கியது. ஒவ்வொரு திருப்பத்திலயும் என்ரை கையிலதான் பஸ் இருகென்றுமாதிரி நானும் டிரைவர் போலாகினேன். கொண்டக்டர் முன்சீற்றில இருந்து நல்ல நித்திரை.
கொஞ்சத்தூரம் போக றோட்டுக் கரையா இருந்த பற்றைகள் எல்லாம் எரிஞ்சுகொண்டிருந்தது. பெரிய நெருப்பு. என்ணெ;டே தெரியேல்ல. பஸ்சும் நிற்கேல்ல. அந்த வெளிச்சத்திலதான் பார்த்தேன். எனக்கு இடப்பக்க நேர் சீற்றுக்குப் பின்னாலே ஒரு பெடியனும் பெட்டையும். அவனின் நெஞ்சில் அவள் படுத்திருந்தாள். ஆனால் முழிப்பு எண்டு தெரிஞ்சது அவனின்  இடக்கை அவளை வளைத்திருந்தது. சில நொடிதான் திரும்பிவிட்டேன்.
ஆனால் என் கண் கள்ளத்தனமாக அவர்களை அடிக்கடி பார்த்துக்கொண்;டது. பஸ்ஸின்ரை வேகத்தையோ றோட்டின் பயங்கரத்தையோ மறந்துபோனன். பக்கத்தில இருந்தவங்கள் வாயைப் பிளந்து நித்திரை.
பஸ்; ஓடிக்கொண்டிருந்தது.

ஈ)பயணங்கள் தரும் அனுபவங்கள் அலாதியானவை. புகைவண்டியில் பஸ்வண்டியில் விமானத்தில் நடைப்;;பயணத்தில் அவை தீராக்காதலுடன் எம்மை அணைத்துக்கொள்கின்றன. பயணங்களில்தான் சுஜாதா அதிகம் எழுதியிருக்கிறார் என்று அறிந்திருக்கிறேன். எனக்குத்தெரிய பஸ்ஸில குறிப்பெடுப்பவர்களும் இருக்கிறார்கள். பரீட்சைக்குப் படித்துக்கொண்டு செல்பவர்களும் இருக்கிறார்கள். தொலைபேசிக்குள்ளே தொலைந்து போகிறவர்கள் இன்று அதிகம். மனிதர்களைப் படிப்பதுதான் பேரனுபவம். வாழ்க்கையில் வளைவு நெளிவு நேர்ப்பாதைகளில் அவை எம்மை அழைத்துச் செல்கின்றன. எங்கேயும் எப்போதும் அனுபவங்கள் விபத்தைவிடவும் அதிகம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.



No comments:

Post a Comment